புலி வேசம் – விமர்சனம்
- Details
- Published on Tuesday, 30 August 2011 18:32
- Hits: 680
தாய், தந்தையை இழந்த ஆர்.கே விற்கு அடைக்கலம் கொடுக்கும் ஊர்ப் பெரியவர் இளவரசு. ஆர்.கே.வின் விசுவாசத்தை காணும் இளவரசு, தனது மகளை பாதுகாக்கும் பொறுப்பை ஆர்.கேவிடமே கொடுக்கிறார். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள். இளவரசுவின் மகளுக்கோ ஆர்.கே மீது காதல் இருக்க, ஆர்.கே.விற்கு இளவரசு மேல் விசுவாசம் இருக்க, இளவரசுவோ தன் மகளின் திருமணத்திற்கு தடையாக இருப்பதே ஆர்.கே.தான் என நினைத்து அவரை ஊரை விட்டே துரத்துகிறார்.
சென்னை வந்து ஆர்.கே. இறங்கும் போதுதான் தெரிகிறது, இளவரசுவின் மகளும் (கதாநாயகி) தன்னுடன் வந்திருக்கிறாள் என்று. கதாநாயகியை திரும்ப ஊருக்கு கொண்டு செல்ல முயல்கிறார் ஆர்.கே. அதற்குள் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறார் கதாநாயகி. அவளைக் காப்பாற்றுவதற்காக ரௌடியாக அவதாரம் எடுக்கிறார். இடையில் காவல் துறை அதிகாரியாக வரும் கார்த்திக், தன் சொந்தப் பகையை தீர்த்துக் கொள்ள ஆர்.கேவுடன் கை கோர்த்துக் கொள்கிறார். இதனிடையில் சென்னையில் சதாவை சந்திக்கிறார் ஆர்.கே. சதாவிற்கு ஆர்.கே மீது காதல் வருகிறது.
இதில் இளவரசுவின் மகள் காப்பாற்றப்பட்டாரா? ஆர்.கே.வின் விசுவாசம் என்னாயிற்று? சதாவின் காதல் என்னாயிற்று? கார்த்திக்கின் பகை தீர்ந்ததா? என்பதை சொல்லி சுபம் போட்டிருக்கிறார் இயக்குனர் பி.வாசு.
முனியனாக வரும் ஆர் கே கிராமத்து கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு அந்த வேடம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது..ஆனால் சென்னையில் மாடர்ன் ரௌடியாக அவரது கெட்டப்பும், நடிப்பும், சுத்தமாக எடுபடவில்லை.
சிறுவயதில் இருந்து தென்காசியில் வளரும் ஆர்.கே. நெல்லைத் தமிழில் பேசாமல் மதுரைத் தமிழில் பேசுவது லாஜிக்காக இல்லை. சென்னையில் அதே கிராமத்து மொழியில் பேசுவதை விடுத்து, உடையில், நடையில் மாடர்ன் ஆனதைப் போல் பேச்சிலும் மாறியிருப்பதை போல் காட்டியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கதாநாயகியாக திவ்யா அவரது கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தாலும் படத்தின் மையம் இவர் தான். கிராமத்து அப்பிராணியாக சென்னைக்கு வரும் ஆர்.கே. கோயம்பேட்டில் இறங்க மறுத்து, “நான் சென்னைக்குதானே டிக்கெட் எடுத்தேன், நீங்க ஏன் கோயம்பேட்ல இறக்கி விடறீங்க’’ என்று கேட்க, கண்டக்டரே ‘இதுதான்யா சென்னை’ என விளக்கம் கொடுக்க... அப்போது குறுக்கிடும் திவ்யா, தனது அதிரடி பேச்சாலும் நடிப்பாலும் கண்டக்டரை அசரவைத்து விடுவார். நம்மையும்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா இப்படத்தில் வருகிறார். அவரை இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது. அவருடைய ஐயர் பாஷை நன்றாக இருக்கிறது. ஆனால் அவர் ஆர்.கே.விற்கு ஜோடியாகவும், அவருடன் டூயட்டும் ஆடி நடித்திருப்பதும் நன்றாக இல்லை என்றே சொல்ல வேண்டும். பாவம் சதா.
சதாவைப் போல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நடித்திருக்கிறார். உதவி கமிஷனராக வரும் கார்த்திக். காக்கி சட்டைக்கு போட்ட கஞ்சி விறைப்பாக இருப்பதால், ரவுடிகளின் கும்பலால் குடும்பத்தை இழக்கிறார். இதற்கு காரணமான இன்ஸ்பெக்டரையும், காவலர்களையும் சுட்டுத் தள்ளுகிறார். சஸ்பெண்டில் வரும் கார்த்திக், ரவுடி ஆர்.கே.விடம் கூட்டு சேர்வது பொருத்தமாக இல்லை.
ஒரு உதவி கமிஷனருக்கு இருக்கும் சட்ட நுணுக்கங்களும், நுண்ணறிவும், இல்லாமல் இருக்கிறது என்பதை நம்பும்படியாக இல்லை. திரைக்கதையில் இது ஒரு தொய்வை ஏற்படுத்துகிறது.
காமெடிக்கென்று மயில் சாமியும், கஞ்சா கருப்புவும் வருகிறார்கள் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்கள். சில இடங்களில் வந்து போகிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘வாரேன்.. வாரேன்.. நான் பின்னால் வாரேன்’ பாடல் கேட்கும்படியாக இருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டரின் உழைப்பு நன்றாக இருந்தாலும், அதை ஆர்.கே. சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.கே. என்பதால், அவராவது தன்னை உணர்ந்து இன்னும் நடித்திருக்கலாம். தன் பணத்தை காப்பாற்றியிருக்கலாம். வாசுவின் இம்முயற்சி பலிக்குமா என்பது தெரியவில்லை.கிராமத்து பகுதியில் படம் படு செயற்கை தனம் இருப்பினும்,நகரத்து பகுதியில் காப்பாற்றி இருக்கலாம் தவற விட்டு விட்டார் வாசு
அதன் ஜீவனை இழந்து விட்டது என்றே சொல்லவேண்டும். புலி வேசம் வெறும் வேசமாகிவிட்டது.
Share:












