நடுநிசி நாய்கள் -திரை விமர்சனம்
- Details
- Published on Saturday, 19 February 2011 15:26
- Hits: 4124
"நடுநிசி நாய்கள்" கவுதம் மேனனின் போட்டன் கதாஸ் மற்றும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் சார்பாக தயாரிக்கப் பட்ட படம். இதனை
எழுதி இயக்கியுள்ளார் கவுதம் மேனன். வீரா பாஹு, சமீரா ரெட்டி, தேவா, ஸ்வப்னா ஆப்ரஹாம்,
அஷ்வின் ககுமனு, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி எடிட்டிங் மேற்கொண்டுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம்.
நடுநிசி நாய்கள்" படத்தின் கதைப் படி, படத்தின் முக்கிய கதாபாத்திரமான சமர் எனப்படும் வீரா தாயில்லாத மகனாக, தந்தையின் வளர்ப்பில் மட்டும் வளர்கிறான். மனைவி இல்லாத சமரின் தந்தை, வீட்டிற்க்கே பல பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருக்கிறார். தீடீரென்று ஒரு நாள், இதனை சமர் நேரடியாக பார்த்துவிடுகிறார். அதனால், தனது சிறிய வயது மகனையும் தான் செய்யும் தவறுகளில், கட்டாயமாக ஈடுபடுத்துகிறார் சமரின் தந்தை. இதனால், சமர் மனதளவில் பாதிக்கப்டுகிறான். இதை பற்றி எதேச்சையாக தெரிந்துக் கொள்ளும் சமரின் பக்கத்து வீட்டு பெண்ணான (மீனாக்ஷி என்னும் கதாப்பாத்திரத்தில் வரும்) ஸ்வப்னா சமரை காப்பாற்ற, இந்த பிரச்சனையை பற்றி போலிசுக்கு தெரிவிக்கிறார். தான் செய்த தவறுகள் வெளியுலகிற்கு தெரிந்தது விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துக் கொள்ளுகிறார், சமரின் தந்தை. இதனால் அனாதையாகி விடும் சமரை, வீரா என பெயர்மாற்றம் செய்து தனது பொறுப்பில் வளர்க்கிறார் மீனாக்ஷியம்மா.
தனது தந்தை செய்த தவறுகளினாலும், மீனாக்ஷியம்மா காட்டும் அன்பினாலும் மீனாக்ஷி மீது வீராவுக்கு, ஒரு விதமான ப்ரியம் ஏற்பட்டு விடுகிறது. நாளடைவில், மீனாக்ஷியை தவறான கோணத்திலேயே பார்க்கும் அளவிற்கு வீராவின் மனது மாறிவிடுகிறது. மீனாட்சிக்கு திருமணம் ஆகும் வேளையில் வீரா உணர்ச்சி வசப்பட்டு, பொறாமை கொள்கிறார். அதனால், மீனாக்ஷியின் கணவரை தாக்கி, மீனாட்சியையும் உருக்குலைத்து விடுகிறார். நாளாக நாளாக வீராவிற்கு, மனநிலை மாறி சைக்கோ போல் ஆகிவிடுகிறார். இதனால், பெண்களை கடத்துவது, கற்பழிப்பது, அவர்களை கொலை செய்வது போன்ற தவறுகளை தொடர்ந்து செய்கிறார் வீரா. சுகன்யா என்ற கல்லூரி மாணவி வேடத்தில் வருகின்றார் சமீரா ரெட்டி. பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியும் எதுவும் செய்ய முடியாத பயந்த மற்றும் பரிதாபம் உருவாக்ககூடிய அவலைப்பென் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் சமீரா. தொடர்ந்து பல தவறுகளை செய்யும் வீரா மற்றும் இது போன்ற துன்பங்களை அனுபவிக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கு என்ன ஆகிறது என்பது தான் மீதி கதை.
தொழில்நுட்ப ரீதியில் "நடுநிசி நாய்கள்" பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 1978-ல் கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்து பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த படம் போல் உள்ளது என்று பல கருத்துகள் நிலவி வந்தாலும், தற்காலத்திற்கு ஏற்ற நிறைய நுணுக்கங்களை சேர்த்து ஒரு ஸ்பெஷல் படத்தை எடுத்துள்ளார் கவுதம். இது வழக்கமான கவுதம் மேனன் படம் இல்லை. இது சராசரியாக 100 நிமிட நீளம் மட்டுமே உடைய படம். இது போன்ற சைக்கோ த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள், இசை, பின்னணி இசை மிக அவசியம். ஆனால் இவை மூன்றுமே இல்லாமல் லைவ் ரெகார்டிங் மட்டுமே செய்து இந்த படத்தை வழங்கியுள்ளார்கள். இந்த மூன்றும் இல்லாத குறையை, எடிட்டிங் மட்டும் ஒளிப்பதிவு மூலமே சரி செய்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டது. அப்படி இருந்தும், உச்சக்கட்ட தரத்தில் பணியை செய்துள்ளார் மனோஜ் பரமஹம்சா.
ஒரு சில இடங்களில் தேவைக்கு மேல் நடித்துள்ளாரோ என்று தோன்ற வைத்தாலும், ஒட்டுமொத்தத்தில், அறிமுக (கதை) நாயகனாக நடித்துள்ள வீராவின் நடிப்பு நன்றாக உள்ளது. பயந்த அவலை கல்லூரி பெண் வேடத்தில் ஜொலித்துள்ளார் சமீரா ரெட்டி. ஸ்வப்னா ஆப்ரஹாம், அஷ்வின் ககுமனுவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் தேவாவின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் லாஜிக்குகள் தவறும் தவறுகள் நடத்திருக்கிறது. கதைகளத்தின் போக்கினால், சில ஏற்ற இறக்கங்கள் இருப்பதில் தவறில்லை. மற்றப்படி, குறைகூறும் அளவிற்கு எதுவும் இல்லை. கவுதம் மேனன் தயாரிப்பாளராக மாறியதால், இந்த படத்தை இவள்ளவு சுலபமாக, சுதந்திரமாக அவர் நினைக்கும் விதத்தில் எடுக்க முடிந்திருக்கிறது. இது போன்ற வகையில் வெகு குறைந்த படங்களே வந்துள்ளது. அதைக் கருத்தில் கொள்ளும் போது, இந்த முயற்ச்சி பாராட்ட வேண்டும்.
நல்ல படங்களுக்கும் , நல்ல முயற்சிகளுக்கும் ஆதாரவு அளிப்பதில் தமிழ் ரசிகர்கள் பெயர் போனவர்கள். அந்த வகையில், இது போன்ற முயற்சிகளுக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டியது நமது கடமை.
Share:












