காசேதான் கடவுளடா - திரைவிமர்சனம்
- Details
- Published on Saturday, 10 September 2011 15:01
- Hits: 928
அறிமுக கதாநாயகன் சரண் கூட்டத்தினரின் வேலையே பணக்கார்ர்களிடம் இருக்கும் பணத்தை திருடி இல்லாத நல்லவர்களுக்கு உதவி செய்வதுதான். அவர்கள் குடியிருக்கும் இடத்தை காலி பண்ண சொல்கிறார் லோக்கல் தாதாவான ராஜா. முடியாவிட்டால் 4 கோடி ரூபாய் பணம் கேட்கிறார்.
அதுவரை சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டிருந்த சரண் கூட்டணி, (சரண், திவ்யபத்மினி, ஜீவா,சத்யன்) தங்களின் வீடுகளை மீட்க வேண்டுமெனில், 4 கோடி ரூபாய் பணம் வேண்டும். ஆதலால் சென்னையில் கொள்ளையடிக்க வருகிறார்கள்.
சென்னையில் செயின் திருடனாக இருக்கும் கருணாசுடன் இணைந்து, ஒரு வங்கியிலிருந்து 4 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கின்றனர். பிறகு அந்தப் பணத்தைக், கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கும் ஒரு கட்டடத்தில் மறைத்து வைக்கின்றனர்.
சந்தர்ப்ப வசத்தால் ஒரு மாதம் அந்தமான் தீவு செல்ல நேரிடுகிறது. திரும்பி வந்து பார்த்தால், பணம் புதைத்த கட்டிடம், காவல்துறை ஆணையர் அலுவலகமாக மாறியிருக்கிறது. சில தகிடுத்ததம் வேலை செய்து பணத்தை மீட்க நான்கு பேரும் போராடுகிறார்கள்.
சரணின் கூட்டணி 4 கோடி ரூபாய் பணத்தை மீட்டதா? இல்லாத மக்களுக்கு அவர்களின் வீடுகள் கிடைத்ததா என்பதை காமெடியாகச் சொல்லி சுபம் போட்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குனரான திருமலை.
அல்லாரி நரேஷின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘பிளேடு பாபுஜி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘காசேதான் கடவுளடா’. இப்படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால், நீங்கள் லாஜிக் எதிர்பார்க்க கூடாது.
அறிமுக நடிகரான சரண், போலி காவல்துறை அதிகாரி வேடத்தில் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். காவல்துறை ஆணையர் டெல்லி கணேஷின் பகளாக வரும் காம்னா ஜெத்மலானி, கதாநாயகன் சரண் ஒரு திருடன் என்று தெரிந்தும் அவரைக் காதலித்து, அவரது திருட்டுத்தனத்துக்கு உதவி செய்ய பயன்பட்டிருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டுகிறார்.
பாண்டியராஜன், மயில்சாமி, டெல்லி கணேஷ், மனோபாலா, கருணாஸ், சிங்கம்புலி, சிங்கமுத்து, பாண்டு, நளினி, பாபிலோனா, பரவை முனியம்மா, சத்யன் என்று, மிகப் பெரிய காமெடிப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருப்பது மட்டுமின்றி, காமெடியை சரவெடியாக கொளுத்திப் போட்டிருக்கிறது.
கட்டட மேஸ்திரியான மயில்சாமியின் கையில் 4 கோடி ரூபாய் கிடைப்பதும், அதை அவர் தன் வீட்டு மெத்தைக்குள் மறைப்பதும், அந்த மெத்தை பலரிடம் கைமாறிச் செல்வதும், அதை சரணின் கூட்டணி துரத்துவதும் கலகல காமெடி.
மயில்சாமிதான் இப்படி என்றால், தான் அடிக்காத கொள்ளைக்காக அல்லல் படுகிறார் சிங்கமுத்து. அவரது கைக்கு 4 கோடி ரூபாய் பணம் கிடைத்தும் அதை தவறவிடுவது போன்ற திரைக்கதை அமைப்பு சிறப்பாக இருக்கிறது.
4 கோடி ரூபாயை கைப்பற்ற இவர்கள் போடும் போராட்டத்தினை ‘கைக்கு கை மாறும் பணமே... உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே..’ என்ற பழைய பாடல் வரிகளை ஞாபகப்படுத்துகின்றன.
இப்படத்தில் நடித்திருப்பது மட்டுமின்றி இசையும் அமைத்திருக்கிறார் கருணாஸ். இவரின் இசை, இந்த ‘காசேதான் கடவுளடா’ படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாண்டியராஜனுடன் பாபிலோனா ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதில் அவர் கவர்ச்சி மழை பொழிந்திருக்கிறார்.
காமெடி படம் என்றாலே அதில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பார்கள். அதற்காக கொள்ளைக் காரர்களுக்கு, வங்கியின் மேலாளரே பணத்தை அள்ளிக் கொடுப்பது பொருத்தமாக இல்லை. காவலுதுறை ஆணையாளரான டெல்லி கணேஷ் வங்கி கொள்ளையை நியாயப்படுத்துவது நம்பும்படியாக இல்லை.
படகில் தவறுதலாக ஏறியவர்களை, அந்தமான் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். மற்றபடி காமெடி கலாட்டாவாக இருக்கிறது இந்த ‘காசேதான் கடவுளடா’.
Share:












