ரா.ஒன் – இசை விமர்சனம்
- Details
- Published on Thursday, 13 October 2011 16:45
- Hits: 843
ஷாரூக்கான், கரீனா கபூர், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரா-ஒன்’. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில், அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு விஷால்-சேகர் மற்றும் அகோன் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டது.
தமிழில் வெளியாக இருக்கும் இப்படத்தில் மொத்தம் ஆறு படல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அத்தனை பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
இப்பாடலின் குறுந்தகட்டில் முதல் பாடலாக இடம்பெற்றுள்ள பாடல்.. ‘முத்தாட சம்மக் சல்லோ...’ என்ற பாடல். அகோல், விஷால் தத்லானி ஆகியோருடன் ஹம்சிகா ஐயர் பாடியுள்ள பாடல்...
இப்பாடலில்... “நீ என்னை ஏற்றுக் கொண்டால் கண்ணில் கொஞ்சம் காதல் நீ மட்டும் இல்லையென்றால் நேசிக்காது காதல்...” என்ற வரிகள் மட்டும் தெளிவாக தமிழில் நமக்கு கேட்கிறது.
“வன பீமா சம்மக் சல்லோ..!” என்ற ஹம்மிங் பாடலில் அடிக்கடி ஒலிக்கிறது. வித்தியாசமான டிரம்ஸ், பேக்பைப்பர் இசையை கலந்து கட்டி இப்பாடலில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். இப்பாடலில் ஹிந்தி வாடை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவதாக ஒலிக்கும் பாடலான “பச்சை பூவே பொன் வானம் காட்டு” என்ற பாடலை முழுக்க முழுக்க ராக் இசை வடிவில் அமைத்திருக்கிறார்கள். இதில் சங்கர் மகாதேவனின் குரல் தனித்து ஒலிக்கிறது.
“என் கனவில் வந்து அன்னா சொன்னா...
ஆசையில் வந்து அனுஷ்கா சொன்னா…
செல்போனில் வந்து சினேகா சொன்னா...’’ என்ற வரிகள் நமது நடிகைகளின் பெயர்களை தாங்கி வருகிறது.
மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் பாடலான “பூ உலகமா..? பொன்னின் உலகமா..? ” என்ற பாடலை சங்கர் மகாதேவன், உன்னி மேனன், மிதுன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர். காதலியைப் பார்த்து காதலன் பாடுவது போல் அமைந்திருக்கும் பாடல் இது.
“ஜில்தாரா.. ஜில்தாரா.... ஒரு காதல் சுகமே தருவாயா
ஜில்தாரா.. ஜில்தாரா.... ஒரு முத்தம் தனை தருவாயா’’ என்ற கோரஸ் அருமையாக இருக்கிறது. இப்பாடலும் ராப்பிசை வடிவம்தான்.
நான்காவதாக இடம்பெற்றிருக்கும் “என் உயிர்... என்னை விட்டு பிரிந்த பின்னே... என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ...” பாடலை சின்மயி பாடியிருக்கிறார். காதலனை நினைத்து காதலி பாடும் சோகமான பாடல் இது என்பதால் இப்பாடல் மட்டும் மெல்லிசையாக ஒலிக்கிறது. இருப்பினும் இடையிடையே கிடாரின் அதிர்வுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் ஒலிக்கின்றன.
ஐந்தாவதாக இடம்பெற்றிருக்கும் பாடலான ‘உலகம் உலகம் உல்லாசம்’ பாடலை நரேஷ் ஐயர் பாடியிருக்கிறார். ராப் பாடல் வடிவில் அமைந்துள்ள இப்பாடல் கதாநாயகனின் மகிழ்ச்சியை உணர்த்துவதாக இருக்கிறது.
“நம் தோளிருக்கு மாலை கொள்ள…
நாளிருக்கு நன்மை கொள்ள...
வியர்வை சிந்தி வெற்றி கொள்ள வா..!” என்ற வரிகள் மனதை தொடுகின்றன.
இந்த குறுந்தகட்டில் ஆறாவதாக இடம்பிடித்திருக்கும் பாடலான “யாருக்கும் யாருக்கும் நெஞ்சே அஞ்சாதே” பாடலை சங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார். கட்டைக் குரலில் வித்தியாசமாக பாடியிருக்கிறார் சங்கர் மகாதேவன்.
இப்பாடலில் “விடியாத இரவேதும் இல்லை...
முடியாத செயல் இல்லை...!” - என்ற வரிகள் தன்னம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது. கதாநாயகன் தனது தன்னம்பிக்கையைப் பற்றி பாடும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
நேரடி தமிழ் படமாக இது இல்லை என்பதாலும், இசையமைப்பாளர் மும்பையை சேர்ந்தவர் என்பதாலும் இப்பாடல்களின் இசைகளில் அதிகம் ராப், ராக் வடிவமே இடம் பெற்றுள்ளன. யாருக்கும் யாருக்கும் அஞ்சாதே பாடல் ரசிக்கும் படியாக இருக்கிறது.
- மோகனன்
ரா.ஒன் படத்தின் திரை முன்னோட்டம் படிக்க இங்கே கிளிக் செய்க..!
ரா.ஒன் படத்தின் பிரத்யோக இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்க..!
English summary
Ra-One is one of the most expected films of this season. Tamil version of this film’s audio was released recently. Lyrics are written by Vairamuthu, Music is composed by Vishal-Shekar and Akon. It has six songs in it.
Share:












