மயக்கம் என்ன – இசை விமர்சனம்
- Details
- Published on Monday, 26 September 2011 15:12
- Hits: 704
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
தனுஷ் இரண்டு பாடல்களும், செல்வராகவன் இரண்டு பாடல்களும், இருவரும் சேர்ந்து ஒரு பாடலையும் எழுதி இருக்கின்றனர். ஆடியோ சிடியில் இப்படத்தின் தீம் மியூசிக்கும் இடம்பிடித்திருக்கிறது.
இதில் இடம் பெற்றுள்ள “பிறை தேடும் இரவிலே உயிரே....” என்ற பாடலையும் “காதல் என் காதல்… அது கண்ணீருல போச்சு.. அது போச்சு...’’ என்ற பாடலையும் தனுஷ் எழுதியுள்ளார். “ஓட ஓட ஓட தூரம் குறையல... பாட பாட பாட பாட்டு முடியல... போக போக போக ஒண்ணும் புரியல.. ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல’’ என்ற பாடலை தனுஷ்+செல்வராகவன் கூட்டணி எழுதியிருக்கிறது. மீதமுள்ள இரு பாடல்களை செல்வராகவன் எழுதி இருக்கிறார்.
இப்படத்தின் பாடல் சிடியில் முதல் பாட்டாக வருவது “நான் சொன்னதும் மழை வந்துச்சா... நா சொல்லல வெயில் வந்துச்சா..!”. இப்பாடலிற்கு நரேஷ் ஐயர் குரல் கொடுத்திருக்கிறார். இந்த பாடலுக்கு மேற்கத்திய பாணி இசையை மிகவும் மெல்லிசை ரகமாகவும், பாப் இசை ரகமாகவும் கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.. கிளாப்ஸ், டிரம்ஸ் என இசையில் வித்தியாசத்தைக் காண்பித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
இதில் வரும் வரிகளான
‘கருவாட்டு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்லை
எடுப்பட்ட நினைப்பு உள்ள
நீ களவாணி....’ ரசிக்கும் படியான வரிகளாக இருக்கிறது. தன் காதலியை நினைத்து (அ) பார்த்து கதாநாயகன் பாடுவது போல் அமைந்திருக்கிறது.
அட்டகாசமான மெல்லிசை கலந்த காதல் டூயட் பாடல்தான் “பிறை தேடும் இரவிலே உயிரே... எனைத் தேடி அலைகிறாய்...”
சைந்தவியின் குரல் நம்மை உருக வைக்கிறது எனில் உடன் பாண்டும் ஜி.வி.பிரகாஷ் நம்மை கரைய வைக்கிறார். அதிலும் அவர் ஹம்மிங் போல பாடும்
“உனக்கெனமட்டும் வாழும் இதயமடி...
உயிருள்ளவரை நானுன் அடிமையடி...” என்ற வரிகளும், அவர் பாடிய விதமும் அருமை. காதலர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை, காதலைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது. இது ஒரு காதல் இசைத் தாலாட்டு
மூன்றாவதாக வரும் பாடலை தனுஷ் எழுதியது மட்டுமின்றி, பாடியும் இருக்கிறார்.
“ஓட ஓட ஓட தூரம் கொறையல...
பாட பாட பாட பாட்டும் முடியல...” – முதலில் வரும் சரணம் வசனகவி நடையில் இருக்கிறது. இது தமிழ் சினிமா உலகிற்கு புதிதோ என்று சொல்லத் தோன்றுகிறது.
கேமரா கிளிக் சத்தம் கூட இதில் இசையாக்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். வித்தியாசமான பாடல்.
‘ப்ரீயா சுத்தும் போது பிகரு இல்லையே
பிடிச்ச பிகரும் இப்ப புரீயா இல்லையே
கையில பேட்டிருக்கு பாலு இல்லையே
லைப் புல்லா இந்த தொல்லையே’ என்ற வரிகள் சராசரி இளைஞனின் ஏக்கமாக இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிறது. இடையில் ஒரு பொம்மையின் கீச்சுக் குரலும் வருகிறது.
“என்ன செய்தோம் இங்கு...’’ என்று துவங்கும் பாடல் ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில் ஒலிக்கிறது கடவுளைப் பற்றி பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில் ஆர்மோனியம் தபேலா, வயலின், வீணை கர்நாடக சங்கீத பாணியில் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
“வாழ்க்கையின் பொருள்தான் என்ன
வாழ்ந்துதான் பார்த்தால் என்ன?
கதை சொல்கிறாய்... பயம் கொள்கிறாய்...’’ என்ற வரிகள் கவரும்படியாக இருக்கிறது.
ஐந்தாவதாக இடம் பிடித்திருக்கும் பாடல்
“காதல் என் காதல்... அது கண்ணீருல...
போச்சி அது போச்சி... அட தண்ணீருல...’’ என்ற பாடலாகும்.
காதலில் தோல்வியுற்ற கதாநாயகன் புலம்புவது போலவும், அவனுக்கு அவனது நண்பன் ஆறுதல் சொல்வது போலவும் இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்பாடலை அண்ணன் தம்பிகளான தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
கடம், நாதஸ்வரம், டிரம்ஸ் எல்லாம் கலந்து கட்டி இப்பாடலில் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
“அடிடா அவளை...
உதைடா அவளை...
வெட்றா அவளை..
அவ தேவையே இல்லை...’’ என்று செலவராகவன் பாடுவது நம் காதில் ஒலிக்கிறது. போதையில் இருவரும் பாடிக் கொண்டிருக்க, அதில் கதாநாயகன் சொல்வது போல் வரும் வரிகள் இதோ...
“வேணாண்டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாமே வாழ்வின் சாபம்
பின்னாடி போயி கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி போதும் போதும்’’
மயக்கம் என்ன பாடல்களில் 5 பாடல்களையும் ஐந்து விதமாய் கொடுத்து அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ‘பிறை தேடும்’ பாடல் கண்டீப்பாக ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும்.
- மோகனன்
Share:












