அரவான் – இசை விமர்சனம்
- Details
- Published on Saturday, 08 October 2011 16:28
- Hits: 974
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரித்து வரும் படம் ‘அரவான்’. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறும் சம்பவங்களை கதைக் களமாகக் கொண்ட இப்படத்தை வசந்தபாலன் இயக்கி வருகிறார். ஆதி, பசுபதி, தன்ஷிகா முக்கிய பாத்திரங்களேற்று நடித்துள்ளனர்.
பின்னணி பாடகாராக இருக்கும் கார்த்திக், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருமாறியிருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் இருதினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. நா. முத்துக்குமார் இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். மொத்தம் இப்படத்தில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களின் இசைவிமர்சனம் இதோ...
இந்த குறுந்தகட்டில் ஒலிக்கும் முதல் பாடல் “நிலா... நிலா.. போகுதே..! நில்லாமல் போகுதே..!” விஜய் பிரகாஷின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் காதல் தாலாட்டு ரகம். இடையில் வரும் ஹரிணியின் குரல் இதமான சுகம். விஜய் பிரகாஷின் சங்கதிகள் பாடலுக்கு பதம் சேர்க்கின்றன. கார்த்திக்கின் இசை கோர்ப்பு இப்பாடலுக்கு மிகவும் அருமை.
டிரம்ஸை மெல்ல மெல்ல தட்டி, இடையில் வீணையின் இசையக் கூட்டி பாடலை ரசிக்க வைக்கிறார் கார்த்திக். பாடலே இவ்வளவு இனிமை என்றால் அதை காட்சிகளோடு பார்ப்பது எப்போது என்ற ஆவலை இந்த பாடல் தூண்டுகிறது.
இதில் வரும் வரிகள் “மௌனக் கூட்டினை திறக்கும் சாவியே... கனவை உருட்டி விடும் கள்ள சோழியே... சிறகுள்ள சிலையே... சிற்றின்ப நதியே..!’’ வரிகள் ரசிக்க வைக்கின்றன. காதலனுக்கும் காதலிக்கும் இடையேயான பாடலிது.
இரண்டாவது பாடலாக வருவது “உன்னைக் கொல்லப் போறேன்... முத்தம் கொடுத்தே உன்னை கொல்ல போறேன்...’’ என்ற பாடல். எம்.எல்.ஆர். கார்த்திகேயன், பவதாரிணியின் குரலில் ஒலிக்கிறது. காதலர்கள் பாடும் பாடலிது. கடம் பிரதானமாக ஒலிக்க, இடையிடையே புல்லங்குழலையும், நாதஸ்வரத்தையும் ஒலிக்க விட்டிருக்கிறார்.
“சூரியனார் பார்வை... சந்திரனார் மேல... விழுவது போல.... நீயும் நானும் பார்த்தா போதும்...பத்து புள்ளை பொறக்கும்..’’ என்ற வரிகள் ரசிக்க வைக்கின்றன.
இந்த குறுந்தகட்டில் மூன்றாவதாக ஒலிக்கும் பாடல்தான் “ஒருவான் இருவான் பாலவான் கேட்பவன் அரவான்“ அரவானின் அருமை, பெருமைகளை சொல்வதாக வரும் இப்பாடல், கார்த்திக்கின் குரலில் ஒலிக்கிறது.
இப்பாடலில் பழமையான இசைக்கருவிகளை ஒலிக்க விட்டிருக்கிறார். இடையில் வயலின், ஆர்மோனிய இசையும் கலந்திருக்கிறது.
நான்காவதாக வரும் பாடல் “ஊரே... ஊரே... என்னப் பெத்த ஊரே... ராத்திரி திங்கப் போறோம் சுடு நெல்லுச் சோறே...” கோரஸ் குரலில் ஒலிக்கும் பாடலாக வருகிறது.
ஒரு கிராமத்தினர் கன்னம் வைத்து திருடுவதையே தொழிலாக கொண்டிருக்கின்றனர். அவர்கள் திருடப் போகும் போது, இயற்கை தெய்வங்களை வழிபட்டு திருடப் போவதாக இப்பாடல் வருகிறது. கிருஷ்ணராஜ், முகேஷ், பெரிய கருப்பு தேவர், ரீடா, பிரியா என்ற இந்த குழுவினரின் குரல் இப்பாடலில் ஒலிக்கிறது. அதிலும் ‘ஏல ஏல ஏலா’ கோரஸ்... பழம் பெரும் கிராமத்தை நினைவூட்டுகிறது.
“ஆடு கோழி வெட்டாம... அய்யனாரை கெஞ்சாம… நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள்ள பாருடா…’’ என்ற வரிகள் அவர்களது தொழில் திறமைக்கு சான்றாக வருகிறது. புல்லாங்குழலும், டிரம்ஸ் இசையும் தத்தமது பங்கை ஆற்றியிருக்கின்றன.
ஐந்தாவதாக ஒலிக்கும் பாடல் “என் சாமி பேரு கருப்பு... எங்குலத்துப் பேரு நெருப்பு...” கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டம் பற்றிய பாடலிது. இப்பாட்டிற்கு ஒரு பெரும் கூட்டமே குரல் கொடுத்திருக்கிறது.
மனோவின் குரல் மிரட்ட, நடிகர் பசுபதியின் குரல் நமை உருட்டுகிறது. இவர்களுடன் கோட்டை சாமி, கருணை நிதி, ராகுல் நம்பியார், விஜய் நரேன், மாலதி, ஹரீஷ், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
“நாகமலை சாஞ்சிடிச்சே.. நட்ட செடி காஞ்சிடிடுச்சே’’ என்று வரும் பாடல் இந்த குறுந்தகட்டில் ஆறாவது பாடலாக ஒலிக்கிறது. கதாநாயகனான அரவான் மரணித்த பிறகு வரும் பாடல் போல ஒலிக்கிறது. அவனது வீர தீரத்தை பற்றியும் சொல்கிறது இப்பாடல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீர்காழி சிவசிதம்பரம் குரல் கொடுத்திருக்கிறார். கோபால், நாராயணன் ஆகியோர் இவருடன் இணைந்து இப்பாடலைப் பாடியிருக்கின்றனர்.
நாதஸ்வரம், உடுக்கை, பழங்கால இசைக்கருவிகள் எல்லாம் இப்பாடலில் தனி ஆவர்த்தனம் செய்திருக்கின்றன.
இப்பாடலில் வரும் “இந்த உயிரும் பறந்து ஒரு புகையைப் போல போகுமோ… இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ?’’ என்ற வரிகள் உணர்வு பூர்வமாக மனதில் உறைகின்றன.
இந்த குறுந்தகட்டில் கடைசியாக ஒலிக்கும் பாடல் “நந்தகுமாரா... நவநீர்த்த கண்ணா.. மாயன் முகுந்தா...’’. சுபிக்ஷாவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல், படத்தில் ஸ்வேதா மேனன் பாடி ஆடுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்பாடலில் மிருதங்கம் பிரதானமாய் ஒலிக்க, விணை இசை இடையில் கலக்க, சலங்கை சத்தம் மெலிதாய் வருடுகிறது. இப்பாடலில் வரும்
“குளிர் கூதல் வரும்போது அனல் தான் அவன்...
தளிர் கைகள் தொடும் போது தணல் தான் அவன்...
இரு கொங்கை அனல் மேட்டில் பூணூல் தான் அவன்...’’ என்ற வரிகள் ஒரு தேவதாசியின் குரலாய் எடுத்துக் காட்டுகின்றன.
தற்போதைய காலகட்டத்தில், பாடலுக்கு அமைக்கப்படும் இசை, பாடலின் வரிகளை மென்று தின்று கொன்று விடுகின்றன. ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களிலும் குரலை முன்னிறுத்தி, இசைகள் பின்னால் ஒலிக்கின்றன. இதற்கு இசையமைப்பாளர் கார்த்திக்கை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பழங்கால இசைக்கருவிகளை ஆய்வு செய்து, அவற்றை தேடிப் பிடித்து இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் கார்த்திக். பாடல்கள் அனைத்தும் எழுதப்பட்ட பின்பே, இப்பாடல்களுக்கு இசையமைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. அதாவது பாட்டுக்கு மெட்டமைத்திருக்கிறார்.
‘நிலா நிலா போகுதே...’ பாடல் சுகமோ சுகம். இப்பாடல் டாப் லிஸ்டில் இடம் பெறுவது உறுதி. எதன் சாயலும் இல்லாத அரவான் படத்தின் பாடல்கள் அருமை... அருமை... அருமை!
- மோகனன்
English summary
Aaravan fil tunes are out now. This movie is being directed by Vasantha Balan. Aadhi, Pasupathi, dansika played lead roles in the movie. Na.Muthukumar penned the lyrics for this film. On the whole there are 7 songs and all are variety numbers. singer Karthick turned music director with this film and old music instruments are used to score tunes for this movie. Surely this tunes will lure audience.
Share:












